கிருஷ்ணகிரி தாலுகாவில், 135 முழுநேர ரேஷன் கடை, 119 பகுதிநேர ரேஷன் கடை, என மொத்தம், 254 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 1 லட்சத்து, 36 ஆயிரத்து, 129 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் கலெக்டர் சரயு கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட மாரிசெட்டிஹள்ளி பாறையூர், மலையாண்ட ஹள்ளி, குட்டூர் ரேஷன் கடைகளை ஆய்வு செய்தார். அப்பகுதி பொதுமக்களிடம், ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா, சரியான நேரத்திற்கு திறக்கப்படு கிறதா என கேட்டறிந்தார். மேலும் கடையில் பொருட்கள் இருப்புகள், கொடுக்கும் பொருட்களுக்கு உரிய ரசீதுகள், கணக்குகள் வைத்திருக்க வேண்டுமென ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கூறினார்.
தொடர்ந்து காவேரி ப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், சவுட்டஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்த கலெக்டர் சரயு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் குடிநீர், கழிப்பறை வசதிகள், மதிய உணவு சமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள் பூமாலை வணிக வளாகத்தை மறு சீரமைப்பு செய்யுமாறும், பணிகளை விரைந்து முடிக்கவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது உதவி திட்ட அலுவலர் ரகு, கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஸ், வெங்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.